Sunday, 17 December 2017

ஆணவப் படுகொலை: நீதியின் நிழலில் நிகழும் மரணங்கள்!

ஆணவப் படுகொலை:

நீதியின் நிழலில் நிகழும் மரணங்கள்!


பூவிழியன்


சனவரி 10,2017, ஆணவக்கொலை வழக்கில் முதன் முறையாக மரண தண்டனை விதிக்கப்பட்ட நாள். துணிச்சல் மிகுந்த இத்தீர்ப்பை நீதியரசர் அப்துல்காதர் அவர்கள் திருநெல்வேலி நீதிமன்றத்தில் அறிவித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் சாதி வெறியர்களையும் அதிர்ச்சிற்குள் ஆழ்த்தினார். அவரைப் பாராட்டி நெகிழ்ந்துகொள்ளும் அதைவேளையில், நீதித்துறை மீது நம்பிக்கை இழந்து நகரும் எளிய மக்களுக்குள் புத்துணர்ச்சியை நட்டுவைத்திருக்கிறது இத்தீர்ப்பு.
மேலும், வழக்குப் பதியப்பட்ட எட்டு மாதங்களில் கொடுக்கப்பட்ட விரைவுத்தீர்ப்பும் சாதி வெறியர்களின் முகத்தில் அச்சத்தைப் பாய்ச்சும் வெளிச்சமும் இது. சாதியச் சமூகத்தின் கொடூரப்போக்குகளைக் கடந்து அனிச்சைச் செயலாக நிகழும் இதுபோன்ற சனநாயகம் நிரம்பிய நிகழ்வுகளைக் கொண்டாடத்துடிக்கும் மகிழ்ச்சி கவ்விய மனநிலையில் இத்தீர்ப்பை இசுலாமியர் என்பதால் மட்டுமே கிடைத்த நீதியா என நமக்குள் சிறு நெருடல் முளைக்கிறது.

இந்து நீதிபதிகள் விசாரித்த ஆணவக்கொலை வழக்கு களில், அவர்களின் சிந்தனையை ஆக்கிரமிக்காத இம் முடிவு, நீதியரசர் அப்துல்காதருக்குள் மட்டும் எப்படி நிலைபெற்றது. துணிந்து வெளிப்பட்டது. இதனை உணரும் புள்ளியில் இருந்து தான் நீதித்துறையில் படிந்திருக்கும் சாதி ஆணவப் போக்கைப் புரிந்துகொள்ள முடியும். தலைக்கவசம்(கெல்மெட்) அணிவதற்குக் காட்டிய தமிழக நீதித்துறையின் அக்கறையும், வழங்கிய நெருக்கடி நிறைந்த அதிரடித் தீர்ப்பும் சாதி ஒழிப்புக்களத்தில் வெளிப்படாமல் கள்ளமௌனமாக மாறிவிடுவதுதான் நீதித் துறையில் பரவியிருக்கும் சாதி ஆதிக்கத்தின் பேராபத்தாகும். மேலும், ஒரு மாநிலத்தின் முதல்வரையே குற்றத்தின் அடிப்படையில் தண்டித்து சிறைப்படுத்த துணியும் இதன் தன்னிச்சை அதிகாரம் சேரிக்குள் மட்டும் நுழைய மறுப்பது கவலையையும் நம்பிக்கையின்மையையும் நமக்குள் திணிக்கிறது.

இந்தியாவில் மட்டும் வருடத்துக்கு 1000 பேர் சாதி ஆணவத்திற்குப் பலியாவதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. உலகில் ஐந்து சாதி ஆணவக் கொலைகள் நடந்தால் அதில் ஒன்று இந்தியாவில் நடக்கிறது. கடந்த மூன்று வருடங்களில் தமிழகத்தில் 80க்கும் மேற்பட்ட சாதி ஆணவக் கொலைகள் நடந்திருப் பதாக தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. இவை முன்னெப்போதையும் விட அதிகம். ஆனால் இந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் சாதி ஆணவக்கொலைகள் நிகழவே இல்லையா? என்றால் 2003இல் கூட கண்ணகி-முருகேசன் கொலைகள் நடந்திருக்கின்றன. ஆனால் அன்றைய அரசியல் பின்புலம் வேறு. இன்றைக்கு தலித் எதிர்ப்பை வலிமைப்படுத்தும் வெறுப்புப் பிரச்சாரமாக மாறி யிருக்கிற சாதி அடையாள அரசியல் உத்திகள் தான் ஆணவக்கொலைகள் துளிர்ப்பதற்கான அத்துமீறலை ஊட்டுகிறது.

ஆணவக்கொலைகளைத் தடுப் பதற்குத் தனிச் சட்டம் கொண்டு வரவேண்டும் என பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து, மத்திய மாநில அரசுகளின் செவி களைத் திருகினாலும், விலகிச் செல்லும் அரசியல் சூழலில் இது போன்ற தீர்ப்பு மட்டுமே நமக்குள் நம்பிக்கையை விதைக்கிறது. மனித உரிமைத்தளத்தில் மரண தண்டனையை எதிர்த்து குரல் எழுப்பி வரும் அதேநிலையில் சாதிய வன் கொடுமைகளுக்கு மரண தண்டனை விதிப்பதில் தவறில்லை என மனதிற்குள் வரம்பைக் கடந்த கோரிக்கை ஒன்று உச்சம் பெறுகிறது. அப்போதாவது சாதிய பாகுபாடும் படுகொலைச் செயல்களும் குறைந்து விடாதா என்னும் தலித்திய உணர்வின் சுயநலம் இது.

இந்த அரசியல் மற்றும் சாதிய நெருக் கடிகளுக்கிடையில், விருத்தாச்சலம் கண்ணகி - முருகேசன், தருமபுரி இளவரசன், சென்னிநத்தம் கோபால கிருஷ்ணன், ஓமலூர் கோகுல்ராஜ், உடுமலை சங்கர், அரியலூர் நந்தினி என சில படுகொலைகள் மட்டுமே ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. நமக்குள்ளும் அவை அடையாளப்பட்டு வடுவாக வடிவம் பெற்றிருக்கிறது. இவை தவிர்த்து பெரும்பாலான ஆணவக் கொலைகள் பொதுச்சமூகத்தின் கண்களுக்குள் சிக்காமல் கரைந்துவிடுகிறது.

திருநெல்வேலி, வண்ணார்பேட்டை, இளங்கோ நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்(27). ரயில்வே ஊழியர். இவரும் நெல்லை தச்சநல்லூர், சங்கர நாராயணன் மகள் காவேரியும் காதலித்து வந்தனர். தங்கள் குடும்பத்திற்குள் நிலவும் சாதிவெறிப்போக்கை உணர்ந்த இவர்கள், 2016 மே மாதம் 3 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி வெளியூர் சென்று திருமணம் செய்துகொண்டனர். மகளைத் தேடிய சங்கரநாராயணன், அவரது மனைவி செல்லம்மாள் ஆகியோர், வண்ணார்பேட்டையில் உள்ள விஸ்வநாதன் வீட்டிற்குச்சென்று விசாரித்தனர். வீட்டில் இருந்த விஸ்வநாதனின் அக்காள் கல்பனா, தெரியவில்லை எனப் பதில் கூற ஆத்திரமுற்ற சங்கரநாராயணனும், அவரது மனைவி செல்லம்மாளும், கல்பனாவை வீட்டுக்குள் வைத்து வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பினர். இறந்த கல்பனா கர்ப்பிணி. கொலையாளி சங்கரநாராயணன், தச்சநல்லூர், கிராம தலையாரி. வேறு ஜாதியை சேர்ந்தவர். அவரது மகள் காவேரியை தலித் வகுப்பை சேர்ந்த விஸ்வநாதன் திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட சாதி ஆணவத்தில் நடந்து முடிந்ததுதான் இக்கொலை.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சங்கரநாராயணன், செல்லம் மாள் ஆகியோரைக் கைதுசெய்தனர். நெல்லை இரண்டாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்ற இவ்வழக்கில் நீதிபதி அப்துல்காதர் இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். திருவாரூர் மாவட்டம், அரித்துவாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லெட்சுமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிவாஜியை ஆறு வருடங்களாக காதலித்து வந்தார். திருமணம் செய்துகொள்வதற்காக வீட்டை விட்டு இருவரும் வெளியேறினார்கள். இதனையறிந்த ஆதிக்கச் சாதியினர் ஒரு கட்டத்தில் சிவாஜியைக் கடத்தி கொலை செய்து சாதி திமிரை தீர்த்துக் கொண்டனர். இந்தச் சம்பவம் நடந்தது 2008 ஆம் ஆண்டு. இப்போது லெட்சுமியும் அவருடைய எட்டு வயது மகனும் சிவாஜி வீட்டிலேயே வசிக்கிறார்கள். சிவாஜியின் அம்மாவும் தம்பிகளும்தான் லெட்சுமிக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

கண்ணீரில் முகம் கழுவியபடி பேசிய லட்சுமி “மூணு பொண்ணுங்க, மூணு பசங்கனு எங்க வீட்ல மொத்தம் ஆறு புள்ளைங்க. நான் சின்னப்புள்ளயா இருக்கும் போதே எங்க அப்பா, அம்மா இறந்துட்டாங்க. அண்ணன், அக்காங்கதான் என்ன வளத்தாங்க. அம்மாபேட்டையில நான் ஸ்கூலுக்குப் போய்க்கிட்டு இருந்தப்பத்தான் பஸ்ல சிவாஜிய பாத்தேன். அவரு அப்ப ஐ.டி.ஐ படிச்சிக்கிட்டு இருந்தார். ஆறு வருஷம் லவ் பண்ணுனோம். அவரைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு உறுதியா இருந்தேன். அதனால ரெண்டு பேரும் ஒண்ணா இருந்துட்டோம். வயித்துல குழந்த வளர ஆரம்பிச்சிடுச்சு. நாலு மாசம். வீட்ல கண்டுபுடிச்சிட்டாங்க.

‘அவன் என்ன சாதி... நாம என்ன சாதி? அவன மறந்துடு’னு அடிச்சு துன்புறுத்துனாங்க. ஒரு கட்டத்துல திண்டுக்கல்ல அவருக்குத் தெரிஞ்ச ஒருத்தர் வீட்டுல போய் தங்கினோம். நாலு மாசம் அங்க நிம்மதியா இருந்தோம். ஆனா, எங்க அண்ணனுங்க எப்படியோ கண்டுபுடிச்சுகிட்டு வந்துட்டாங்க. அன்னிக்கு காலையில ஆறரை மணி இருக்கும். கதவு தட்டுற சத்தம் கேட்டு, நான் எழுந்திருச்சு திறக்கப் போனேன். ‘நீ போக வேண்டாம்... நான் பார்க்கிறேன்’னு அவரு போய் கதவத் தொறந்தாரு. வெளியில நின்ன ரெண்டு, மூணு பேரு அவரு மூஞ்சியில துணியப்போட்டு தூக்கிகிட்டுப் போயிட்டாங்க. கொஞ்ச நேரத்துல எங்க அண்ணனுங்க வந்தாங்க. நான் ஓடி ஒளிஞ்சுக்கிட்டேன். அப்புறம் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர், என்னை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிகிட்டு போனாரு. `சிவாஜியை கல்லணையில வெச்சி கொன்னுட்டாங்க'னு ஸ்டேஷன்ல இருக்கும்போது போன் வந்துச்சு. என் உயிரையே உருவிப்போட்ட மாதிரி இருந்துச்சு. அப்போ வயித்துல எட்டு மாச சிசுவா இருந்தான் இவன்...’’ என மரணத்தின் வலியோடு தன் காதலன் மரணத்தின் அவஸ்தையை பரிமாறினார்.

திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த பரமசிவம், மாரியம்மாளின் மகன் முத்துக்குமார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முத்துக்குமாரும்,  ஒட்டன்சத்திரம், விருப்பாச்சியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்திருக்கிறார்கள். இதனை அறிந்து ஆத்திரமடைந்த மல்லிகாவின் பெற்றோர்,  முத்துக்குமாரைக் கொலை செய்து விட்டார்கள். கொலைகாரர் களுக்குத் தண்டனை வாங்கிக்கொடுக்க இன்றும் போராடிக்கொண்டிருக்கிறார்கள் முத்துக்குமாரின் பெற்றோர். முத்துக்குமாரின் அம்மா மாரியம்மாள் கூறும்போது, “எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. நாங்க கூலி வேலை செஞ்சு ரேஷன் அரிசி சாப்புட்டுத்தான் புள்ளைய படிக்க வெச்சோம். முத்துகுமாரும் எம்.எஸ்ஸி., கெமிஸ்ட்ரி முடிச்சுட்டு, பி.எட் பண்ணி கிட்டு இருந்துச்சு. பேங்க் பரீட்சை எழுதி பாஸாகிட்டதா மெசேஜெல்லாம் வந்துருந்துச்சு. அன்னிக்கு சாயங்காலம்தான் அந்தப் புள்ளைக்கிட்ட இருந்து போன் வந்துச்சு. ‘எங்கக்கூட படிக்கிற பொண்ணுக்குப் பொறந்தநாளு. கூடப் படிச்ச ஃப்ரெண்ட்ஸுங்க எல்லாம் நாளைக்கு அவங்க வீட்டுக்குப் போறோம்’னு சொல்லிச்சு என் புள்ள. ஃப்ரெண்டு சுரேஷ்கூடத்தான் போறேன்னு சொல்லிச்சு.
மறுநாள் ரொம்ப நேரமா ஆளைக் காணோமேனு போன் பண்ணினப்போ சுவிட்ச் ஆஃப்னு வந்துச்சு. சுரேஷுக்கு போன் பண்ணுனேன். ‘அவனை முன்னாடியே அனுப்பி விட்டுட் டேம்மா’னு சொன்னான். சுரேஷுக்கு மறுபடியும் மறுபடியும் போன் பண்ண, அவன் மாத்தி மாத்தி சொன்னான். ‘கண்ணு... என் மகன் எங்க கண்ணு?’னு அவன்கிட்ட அழ ஆரம்பிச்சுட்டேன். அப்பதான் அவன், ‘நீங்களும் அப்பாவும் மட்டும் விருப்பாச்சிக்கு கிளம்பி வாங்கம்மா’னு சொன்னான். எங்களுக்கு ஒண்ணுமே புரியல. பதறி அடிச்சிகிட்டு கார் எடுத்துகிட்டு ஓடுனோம்.

அங்க போய் பார்த்தா... எம்புள்ள கிணத்துக்குள்ள மிதக்குது!’’ என்னதான் நடந்ததுன்னு கேட்டா, ‘கோழி திருட வந்தான், துரத்துனோம், தவறி கிணத்துல விழுந்துட்டான்’னு ஊரே சேர்ந்து அப்பட்டமா பொய் சொன்னாங்க. அதுக்குப் பொறகுதான் என் புள்ளையும் அந்தப் பொண்ணும் விரும்பின வெவரமே எங்களுக்குத் தெரியவந்துச்சு. அதுக்கு அவுங்க வீட்ல மாப்பிள்ளை பாத்துருக்காங்க. அப்பதான் முத்துக்குமாரை காதலிக்கிறதா அது வீட்டுல சொல்லியிருக்கு. நாங்க தாழ்த்தப்பட்ட சாதிங்கிறதால, பிளான் பண்ணி, முத்துக்குமாரை விருப்பாச்சிக்கு வரவெச்சு, கிணத்துல தள்ளி கொன்னுருக்காங்க. அவளையும் மறைச்சுட்டாங்க” என்று ரத்தக்கதறலைக் கொட்டித் தீர்த்தார். தலித்தாகப் பிறந்தது குற்றமா என்கிற வேதனையே இப்போதுவதை நம் இருதயத்தை இயங்க விடாமல் நசுக்குகிறது.

2014ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியைச் சேர்ந்த விமலாதேவியும், திலிப்குமாரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களை வலுக்கட்டாயமாகப் பிரித்த உசிலம்பட்டி மற்றும் வத்தலக்குண்டு காவல்துறையினர் விமலாதேவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். ஆனால் சில தினங்களில் விமலா தேவி சாதி ஆணவக்கொலை செய்யப்பட்டார்.

அவரது உடல் உருத்தெரியாமல் எரிக்கப் பட்டது.
திலிப்குமாருக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவியதால், அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி, ரிட் மனுதாக்கல் செய்தனர். இவ்வழக்கில் நீதிபதி இராம சுப்பிரமணியம், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டதோடு, காவல்துறை செய்த தவறுகள் குறித்து ஐ.ஜி. விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில் ஐ.ஜி.யும் அறிக்கை தாக்கல் செய்தார். இந்நிலையில், விமலாதேவி தொடர்பான வழக்கு, நீதிபதி இராமசுப்பிரமணியம் தலைமையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பல அதிரடியான உத்தரவுகளை நீதிபதி பிறப்பித்தார்.
விமலாதேவி வழக்கைப் பொறுத்தவரை, இதில் தவறு செய்த காவல் ஆய்வாளர்கள் ஆனந்தி, ராணி உள்பட 5 காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஜாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொள்பவர்களைப் பாதுகாக்க மாவட்டந்தோறும் சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்த வேண்டும்; 24 மணி நேரமும் செயல்படக் கூடிய இலவச தொலைபேசி எண் (ஹெல்ப் லைன்) அறிவித்திட வேண்டும்; புகார்களை இணையம் வழியாகவும் பதிவு செய்யும் வசதியையும் ஏற்படுத்த வேண்டும். நேரடியாக வழங்கப்படும்

புகார்களைப் பெற்றுக் கொள்ளும் காவல்நிலையம், மேற்படி பிரச்சினை குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்திட வேண்டும்.
இதைப் பின்பற்றாத காவல்துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்; பெற்றோர்கள் மற்றும் தம்பதியினர் மற்றும் காதலர்களை அச்சுறுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேவைப்படும் வழக்குகளில் பெற்றோருக்கு சட்டத்தை எடுத்துரைப்பதற்கான ஏற்பாடும், அச்சுறுத்தலில் உள்ள சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதியர் மற்றும் காதலர்கள் தங்குவதற்கு மாவட்டங்கள் தோறும் குறுகிய கால காப்பக வசதியும் செய்து தரப்பட வேண்டும்; இதற்கான நிதி ஒதுக்கீட்டை தமிழக அரசு செய்திட வேண்டும் என்று பல அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதி இராமசுப்பிரமணியம், மேற்கண்ட அனைத்து உத்தரவுகளையும் மூன்று மாத காலத்திற்குள் செயல்படுத்திட வேண்டும் எனவும் தமிழக அரசுக்குக்கெடு விதித்தார். புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக வலியுறுத்தப்பட்ட இந்த உத்தரவுகளும் அரசாலும், ஆட்சி யாளர் களாலும் தீண்டாப் பொருளாகவே புறக்கணிக்கப்பட்டு கிடப்பில் போடப் பட்டது.

கடந்த ஜூலை 2015இல், கோகுல்ராஜ் கொலை நடந்த போதே, தேசிய எஸ்சி  நல ஆணையம், தலித்துகள் மீதான வன் முறையைத் தடுக்க சில பரிந்துரைகளை தமிழக அரசிற்கு அளித்தது. அதாவது, தலித்துகளுக்கு எதிரான வன்முறை நடக்கும் மாநிலங்களில், தமிழ்நாடு முதல் 5 இடங்களில் இருக்கும் மாநிலங்களில் ஒன்று. காவல்துறை நிர்வாகம், இந்த வன்முறைகளைத் தடுக்க தக்க முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என ஆணையம் அந்தப் பரிந்துரைகளில் தமிழக அரசிடம் கூறியிருந்தது.

மேலும் அது, “தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளில் குற்றவாளிகள் தண்டிக் கப்படும் விகிதம் வெறும் 10 சதவீதமாகவே உள்ளது. இது தேசிய அளவிலான சராசரி 30 சதவீதத்தைவிடக் குறைவாகவே உள்ளது. தமிழக அரசு, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை கிடைத்து, தண்டனைக்கான விகிதம் கூடுவதற்கு, போதிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் தமிழக அரசியல் சூழலில் எவ்வித நகர்வும் இல்லாமல் அமைதியைச் சுமப்பது சாதிவெறி நிகழ்வுகளை முறியடிப்பதற்கு முயற்சிசெய்ய விரும்பவில்லை என்பதையே உணர்த்துகிறது. அதுவே அதிர்ச்சியூட்டுகிறது.

இதுதவிர, தமிழகத்தில், எஸ்சி  ஆணையம் இல்லை. ஆதிதிராவிடர் நலத்துறை என்ற அரசு துறையே உள்ளது. இதன் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. எஸ்சி  ஆணையம், மத்திய அரசால் உருவாக்கப்பட்ட பழமையான ஆணையம். தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஆணையத்தை உருவாக்க அரசு தயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மற்ற ஆணையங்களை எல்லாம் அரசு உருவாக்கி வைத்துள்ளது. இது தலித்துகள் மீதான அரசின் வெறுப்பையே வெளிப்படுத்துகிறது. கடந்த 2014 இல் சென்னை உயர்நீதி மன்றம், தமிழக அரசிடம் எஸ்சி ஆணையத்தை உருவாக்கும்படி கூறியது. ஆனால் தமிழக அரசு அதனைப் பின்பற்றவில்லை.

தேசிய எஸ்சி ஆணைய கணக்குப்படி, தமிழகத்தில் 20 சதவீதம் எஸ்சி மக்கள் வசித்து வருகின்றனர். இருப்பினும், ஒரு ஆணையத்தை உருவாக்க தமிழக அரசு தயாராக இல்லை. சட்டமன்றத்தில் இதைப் பற்றி உறுப்பினர்கள் சிலர் பேசும் போதெல்லாம், நலத்திட்டங்களைப் பற்றிப் பேசி கவனத்தை மடைமாற்றிவிடுகிறார்கள் ஆட்சியாளர்கள். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் நிலவும் ஆணவக் கொலைகளைப் பற்றி பிரச்சினை எழும்பியபோது, அப்போதைய நிதியமைச்சர், பன்னீர் செல்வம் ஆணவக் கொலைகள் தமிழகத்தில் நடைபெறவில்லை எனவும் தனிச்சட்டம் தேவையில்லை எனவும் கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் பதிலளித்தார்.

2016ஆம் ஆண்டு நடந்த திருநாள் கொண்டச்சேரிப் போராட்டத்தில் தலித்துகளுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் ஆணை வழங்கியது. ஆனால், நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் அந்த ஆணையை அவமதிக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்த மறுத்தது. இப்படி உயர்நீதி மன்ற மாண்பைக் கொச்சைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பொதுப்பாதை உரிமையை முழங்கிய தலித்துகளை காவல்துறையினரைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தி சாதிவெறியர்களாய் தங்களையும் அடையாளப்படுத்திக்கொண்டது.

எளிய மக்களுக்கான நீதி அரசு எந்திரங் களால் இவ்வாறு நசுக்கப்படும் அவலம் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் 2013 சூலை 4 அன்று பிணமாக மீட்கப்பட்ட தருமபுரி இளவரசன் இறப்பைத் தற்கொலையெனக் கூறி 21-2-2017 அன்று வழக்கையே முடித்தது சென்னை உயர்நீதிமன்றம். சிபிசிஐடி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் இம்முடிவை அறிவித்த தாகச் சொல்லி ஒதுங்கிக் கொண்டது நீதித்துறை. சனநாயகமற்ற இதுபோன்ற நகர்வுகள் நம் மனசாட்சியை நிலை குலையச் செய்கிறது.

இப்படி ஆளும் வர்க்கமும், நீதித்துறையும் தலித்துகளை சாதியப் பார்வையோடு அணுகுகிற ஓரவஞ்சனைப் போக்குகள் அப்பட்டமாய் தென்படுவதால் ஆணவப் படுகொலைகள் அதிகரிக்கிறது. சட்டம் மற்றும் தண்டனை சார்ந்த அச்சம் முற்றிலும் ஆதிக்கச்சாதியினரிடம் இல்லை என்பதையே தொடர் படு கொலைகள் நிருபிக்கிறது. தலித் படு கொலைகள், சேரி தாக்குதல்கள் குறித்து ஓய்வுப்பெற்ற நீதிபதிகளைக் கொண்டு நியமிக்கப்படும் ஆணையங்கள் கூட ஆட்சியாளர்களைத் திருப்திப் படுத்துகிற ஒன்றாக வெளிப்படுவதை அதன் அறிக்கைகள் மூலம் அறியமுடிகிறது. கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட எந்த ஆணையமும் தலித் இழப்புகளையும் வலிகளையும் பற்றி பேசியதில்லை. மாறாக ஆட்சி யாளர்களின் செயல்களை நியாயப் படுத்தும் குரலாக ஓங்கி ஒலித்தன. சமீபத்தில் சாதி ஆணவத்தினால் கொடூரமாகச் சிதைத்து படுகொலை செய்யப்பட்டார் அரியலூர் நந்தினி. நாடக் காதல் என்று சாதி வெறுப்பைத் தூவும் இராமதாசின் வன்னிய இளைஞனால் நடந்த போலிக்காதல் படுகொலையே இது. புழுக்கள் நெளிந்த உடலாய் கிணற்றுக்குள் கிடந்த நந்தினியின் அழுகிய உடல் 15.01.2017 அன்று மீட்கப்பட்டது. இருப்பினும் காவல்துறையின் அலட்சியப்போக்கே நந்தினியின் உயிரைப் பறித்தது. இந்து முன்னணியைச் சார்ந்த மணிகண்டன் தான் நந்தினியை அழைத்துக்கொண்டு போனான் என புகார் கொடுக்கப்பட்டும் முறையான விசாரணையை மேற் கொள்ளாமல் அலைகழித்துள்ளது காவல்துறை. தொடர் வலியுறுத்தலால் ஒருமுறை மணிகண்டனையும் அழைத்து  மேலோட்டமாக விசாரித்து வீட்டிற்கு அனுப்பிவிடுகிறது. பிறகு தான் பிணமாகக் கண்டெடுக்கப்படுகிறது நந்தியின் உடல். இது தான் இன்றைய சாதியப்போக்கு.

இந்த வலிகளை எல்லாம் அறுத்து எறிவதற்கு ஆணவக்கொலைக்குத் தனிச் சட்டமும் தமிழகத்தில் தனி எஸ்.சி. ஆணையமும் உருவாக்கப்பட வேண்டும் என்பது நமது முதன்மையான கோரிக்கையாக இருந்தாலும் அது மட்டுமே நம்மைப் பாதுகாத்திடாது. ஒடுக்கப் பட்ட மக்கள் அமைப்பாவதும் அரசியல் சக்தியாய் அணிதிரள்வதும் தான் சாதியச் சமூகத்தை அச்சுறுத்தும் நம்மையும் ரத்தச் சிதறல்களில் இருந்து மீட்டெடுக்க இயலும். அடுத்த படுகொலை விழுவதற்குள் ஆயத்தமாவோம். சாதியக் கொலைகளைத் தடுப்பதற்கு மட்டுமல்ல, சாதி வெறியர்களை எதிர்ப்பதற்கும்...

நமது தமிழ்மண்/ மார்ச் 2017

உடுமலை சங்கரின் படுகொலைத் தீர்ப்பு: நீதியின் புனிதம்

உடுமலை சங்கரின் படுகொலைத் தீர்ப்பு:

 நீதியின் புனிதம் 


பூவிழியன்



“எனது கணவர் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு உரிய நீதி கிடைக்க ஒன்னே முக்கால் வருடங்களாகக் காத்துக்கிடந்தேன். இந்தத் தீர்ப்பு நீதித்துறைமீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது.” என்கிறது கௌசல்யாவின் காயக்குரல்.  “சங்கரின் படுகொலையால் நாங்கள் பெருந்துயரமடைந்துள்ளோம். கவுரவக்கொலையின் கடைசிப்பலி என் மகனாக இருக்கட்டும். அரசாங்கம் இத்தகைய கொலைகளுக்கு முடிவுகட்ட வேண்டும்” என வலிநிறைந்த வார்த்தைகளால் கொட்டித்தீர்க்கிறார் உடுமலை சங்கரின் தந்தை வேலுச்சாமி. நீதியரசர் அலமேலு நடராசன் 12.12.2017 அன்று வழங்கியுள்ள ஆணவக்கொலைக்கு எதிரான இத்தீர்ப்புதான் சனநாயகத்தின் திசைநோக்கி நாம் பயணப்படுவதற்கான வெளிச்சத்தை விதைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், நிகழ்காலச்சூழலில் நீதிமன்றத்தின்மீது எளிய மக்களுக்கு நம்பிக்கை துளிர்த்திருக்கிறது. சாதிய மிருகங்களின் ஈரக்குலையை மரணபயம் இறுகக் கவ்வியிருக்கிறது. சாதிவெறுப்பு அரசியலின் முகத்தில் அமிலம் வீசப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் மேலாக கௌசல்யாவின் சாதி எதிர்ப்புப் போர்க்களத்தில் நீதி பூத்திருக்கிறது. ஆம், இனி  சாதி மறுப்புக் காதலில் அமைதி முளைக்கும்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர்(22). பொறியியல் கல்லூரி மாணவரான இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் திண்டுக்கல் மாவட்டம், பழநி திருநகரைச் சேர்ந்த சின்னச்சாமி மகள் கவுசல்யா(19) என்ற சாதிஇந்துவைக் காதலித்து வந்தார். படுகொலைக்கு 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண் வீட்டில் திருமணத்துக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அவ்வப்போது பேச்சுவார்த்தைமூலம் பெண்ணைத் திரும்ப அழைத்துச்செல்ல கௌசல்யாவின் குடும்பத்தினர் முயன்றும் தோல்வியே இறுதியானதாக மாறியது. சாதிவெறியின் உந்துதலால் மகளைப் பிரிக்கப்போராடிய அவர்களுக்கு இது மேலும் கோபத்தைக் கொப்பளிக்க வைத்தது. இனி, தாழ்த்தப்பட்டவனோடு தன் மகள் வாழக்கூடாது என முடிவெடுத்த சின்னச்சாமி கூலிப்படையின் மூலம் சங்கரைப் படுகொலை செய்ய எண்ணினார்.

இந்நிலையில், கல்லூரியின் கடைசிநாளின் பிரியாவிடை நிகழ்வுக்காகப் புதுத்துணி எடுக்க 13.3.2016 அன்று உடுமலைப்பேட்டைக்கு சங்கரும் கௌசல்யாவும் சென்றனர். மத்தியப் பேருந்துநிலையம் எதிரில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, கவுசல்யாவின் தந்தை கொடுத்து அனுப்பிய இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேர் இருவரையும் பட்டப்பகலில், பொதுமக்கள் பார்வையின் நடுவே அரிவாளால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தனர். சாலை ரத்தத்தால் நனைய, எவ்விதப் பதற்றமுமின்றி தப்பினர் கொலையாளிகள். ரத்தத்தின் ஈரம் உலர்வதற்குள் ஓய்ந்தது சங்கரின் உயிர்ஓசை. அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் திரைப்படத்தைத் தோல்வியால் நிறைக்கும் அளவில் அமைந்திருந்தன. உலகின் அசைவையே ஒரு நிமிடம் உறைந்துபோக வைத்தது இது. தன் கண் முன்னே கதறக் கதறக் காதலனை வெட்டுவதை விரும்பாத கௌசல்யா சங்கரைப் பாதுகாக்க முயன்றபோது அவருக்கும் தலையிலே வெட்டுவிழுந்தது. இக்கொடுங்காயத்துடன் கவுசல்யா கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது தலையில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்கு 36 தையல்கள் போடப்பட்டன. தீவிர சிகிச்சைக்குப் பிறகு பெற்றோருடன் செல்ல மறுத்து, சங்கரின் குடும்பத்தாருடன் வசிக்க விரும்பி புறப்பட்டுச்சென்றது அவரின் உண்மைக் காதலையும் துணிச்சலையும் மீண்டுமொருமுறை மெய்ப்பித்தது.

வேலுச்சாமியின் மனைவி செல்வநாயகி மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டார். இந்நிலையில் 3 பிள்ளைகளையும் விவசாயக்கூலி வேலை செய்து காப்பாற்றி வந்தார். தனது மகன் சங்கர் குடும்பத்தின் முதல் பட்டதாரியாக வருவான், தன் குடும்ப வறுமையைத் துடைப்பான் எனக் காத்திருந்த நிலையில் அவருக்கு மகனின் மரணச்செய்தியும் வலியின் கொடுமையும் தொண்டையை இறுகக் கவ்வியது. இதனையடுத்துதான் ஆணவப்படுகொலையையும் சாதியின் கொடூரத்தையும் புரியவைத்தது சமூகம்.

இந்நிலையில், உடுமலைப்பேட்டைப் போலீஸார் இப்படுகொலைகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். பின், உடுமலை துணைக்காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. திண்டுக்கல், பழநி, நிலக்கோட்டை, பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட பல இடங்களுக்குத் தனிப்படைகள் விரைந்தன. கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நீதிமன்றத்தில் 14.03.2016 அன்று சரணடைந்தார். இதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், பழநி மணிகண்டன்(25), பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன்(31), திண்டுக்கல்லைச் சேர்ந்த மைக்கேல்(எ)மதன்(25), செல்வக்குமார்(25), பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன்(39) ஆகிய கூலிப்படையினர் கைது செய்யப்பட்டனர். பிறகு, கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, கௌசல்யாவின் மாமா பாண்டித்துரை, கலை தமிழ்வாணன், கொலையாளிகளுக்குத் தம்பதியை அடையாளம் காட்டிய தனராஜ், ஒரு கல்லூரி மாணவர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள்மீது 1,100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. வழக்கும் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், குற்றவாளிகள் தரப்பில் இதுவரை 58 முறை ஜாமின் கேட்டு மனு செய்து இருந்தனர். அத்தனைமுறைகளும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒன்னே முக்கால் ஆண்டுகளுக்குப்பிறகு 12.12.2017 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, தாய்மாமா பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமிக்கு இரட்டைத் தூக்குத்தண்டனை மற்றும் ரூ.3லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை என வலியுறுத்தப்பட்டது. கூலிப்படையைச் சேர்ந்த ஐந்தாவது குற்றவாளியான மணிகண்டனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ஆறாவது குற்றவாளியான செல்வகுமாருக்கும் தூக்குத்தண்டனை.  சின்னச்சாமியின் நண்பர் ஜெகதீசனுக்கு மரண தண்டனை. மைக்கேல், கலை தமிழ்வாணன், மதன் ஆகியோருக்கும் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது.  ஸ்டீபன்  தன்ராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள்  தண்டனை வழங்கப்பட்டது. கவுசல்யாவின் தந்தையைத்  தவிர மற்ற அனைவரும் கூலிப்படையாக செயல்பட்டவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டது.

கௌசல்யாவின் துணிச்சலான தொடர்போராட்டத்திற்கு ஆதரவாகவும் நீதி கிடைப்பதற்கும் வலிமை சேர்த்தவர்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சி.பி.எம், சி.பி.ஐ., கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் ஆகியோரை நினைவுகூர்ந்துள்ளார் எவிடென்ஸ் கதிர். மேலும், ‘அதை எல்லாம் மறக்க மாட்டேன். இது கூட்டுமுயற்சி. அதனால்தான் நீதி வசப்பட்டு இருக்கிறது. விசாரணை அதிகாரி, அரசு குற்ற வழக்கறிஞர்கள் பணிகள் பாராட்டப் படவேண்டியவை. அன்பு மகள் கவுசல்யா நீதியின் அடையாளம். இந்த சின்ன வயதில் நீதிக்காக உறவுகளை இழக்கின்ற செயலில் இறங்கிய அந்த மன உறுதியைக் கண்டு கண்ணீர் வருகிறது’ என தன் நெகிழ்ச்சி பகிர்ந்துள்ளார் அவர்.

தனது கணவன் சங்கர் வழக்கில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்துஎ  கவுசல்யா குறிப்பிடும்போது: “எனது கணவர் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு உரிய நீதி கிடைக்க ஒன்னே முக்கால் வருடங்களாகக் காத்துக்கிடந்தேன். இந்தத் தீர்ப்பு  நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது. வழக்கு முடியும் வரை நீதிமன்றக்காவலில் வைத்திருந்தது அரிதினும் அரிது. சாதிய கவுரவக்கொலை வழக்கிற்கு இந்தத் தீர்ப்பு முன்னுதாரணமாக இருக்கும். தூக்குத்தண்டனை பெரும்பாலானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தூக்குத்தண்டனையில் எனது கருத்து வேறாக இருப்பினும் தீர்ப்பு சாதிவெறியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.

விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு எதிராக மேல்முறையீடு தொடர்வேன். தண்டனை கிடைத்தவர்கள் மேல்முறையீடு செய்தால், அதனை எதிர்த்து வழக்காடுவேன். 3 பேரின் விடுதலையை எதிர்த்து இறுதிவரை சட்டரீதியாகப் போராடுவேன். சங்கருக்கு உரிய நீதி இந்த வழக்கோடு முடிந்துவிடவில்லை. தனிச்சட்டம் படைப்பதுதான் இந்த வழக்கிற்குத் தீர்வாக அமையும். எனக்கும் சங்கரது குடும்பத்திற்கும் ஆபத்து உள்ளது. போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த வன்மத்தை அசைபோடும் சூழலில், கடந்த 13.05.2016 அன்று திருநெல்வேலியில் கௌரவக்கொலை செய்யப்பட்டார் தலித் வகுப்பைச் சேர்ந்த கர்ப்பிணிப்பெண் கல்பனா. தனது அண்ணன் மாற்றுச்சமூகப் பெண்ணைக் காதல் திருமணம் செய்தார் என்பதற்காகப் பெண்ணின் பெற்றோர் இவரைப் படுகொலை செய்து சாதிவெறியைத் தீர்த்தனர். இந்நிலையில் இந்த ஆணவக்கொலை நிகழ்ந்த எட்டே மாதங்களில் 10.01.2017 அன்று திருநெல்வேலி நீதிமன்றத்தில் சாதி இந்துக்களான பெண்ணின் பெற்றோருக்குத் தூக்குத்தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டினார் நீதியரசர் அப்துல்காதர். இதுதான் தமிழகத்தில் ஆணவக்கொலைக்கான முதல் தூக்குத்தண்டனை. ஆனால் இதில் காதலர்கள் படுகொலை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில்மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் 81 க்கும் அதிகமான சாதி ஆணவக்கொலைகள் நடந்திருப்பதாகக் கூறுகிறது புள்ளிவிபரம். ஒரு ஆண்டில் இருபது கௌரவக்கொலைகள் என்பது பதிவான வழக்குகளின் அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், வெளியில் தெரியாமல் நடக்கும் கௌரவக்கொலைகள் ஏராளம். தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் ஆயிரம் பெண்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இதில் பாதிக்கு மேல் காதல் சம்பந்தப்பட்ட கௌரவக்கொலைகளே. இதேபோல் ஆண்டுக்கு 700 பெண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதிலும் பாதிக்குமேல் கௌரவத் தற்கொலைகள்தான். தலித் இளைஞர்களைக் காதலித்த குற்றத்துக்காகப் பெரும்பாலும் சாதி இந்துப்பெண்கள்தான் கௌரவக்கொலை செய்யப்படுகிறார்கள் என்கிறார் எவிடென்ஸ் கதிர்.

ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது கௌரவ கொலைகள் தொடர்பாக தனியாக சட்டம் இயற்றப்படவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், சட்டம் வந்தபாடில்லை. அதிமுக அரசோ தமிழகத்தில் கௌரவக்கொலைகளே நடைபெறவில்லை என்று உளறிக்கொண்டிருக்கின்றது. வட மாநிலங்களில் ’காப்’ பஞ்சாயத்துகள்தான் கௌரவக்கொலைகளுக்குக் காரணமாக இருக்கின்றன. அதேபோல் தமிழகத்தில் சாதிப் பஞ்சாயத்துகள் கௌரவக் கொலைகளும் தற்கொலைகளும் நடப்பதற்கு உந்துதலாக இருக்கின்றன. கௌரவக்கொலைக்கு எதிராக ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளைத் தேசிய பெண்கள் ஆணையமும் தேசிய சட்ட ஆணையமும் 2011லேயே மத்திய அரசுக்கு அறிக்கையாக அளித்திருக்கின்றன. ஆனாலும், மத்திய அரசு இந்த விஷயத்தில் மௌனமாகவே இருக்கிறது.

2010ஆம் ஆண்டில் உலகில் 5,000 ஜாதி ஆணவக் கொலைகள் நடைபெற்றதாகவும் அதில் 1,000 கொலைகள் இந்தியாவில் நடந்தவை என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. அதாவது உலகில் நடந்த ஆணவக்கொலைகளில் ஐந்தில் ஒன்று இந்தியாவில் நடைபெறுவதாகவும் கூறுகிறது ஒரு புள்ளி விபரம்.

மேலும், தமிழகத்தில் கடந்த ஜனவரி 2008ம் ஆண்டிலிருந்து ஜூன் 2010 வரைக்குமான காலகட்டத்தில் 22 மாவட்டங்களில் தற்கொலை செய்துகொண்ட பெண்களில் 1,971 பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. தற்கொலை செய்துகொண்ட பெண்களில் 90 சதவிகிதத்தினர் 30 வயதுக்குட்பட்டவர்கள். இந்தத் தற்கொலைகளில் சாதி ஆணவக்கொலைகளும் அடங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபோன்ற ஆணவக்கொலைகளை தற்கொலைகள் என்று மூடிமறைப்பதில் குடும்ப உறுப்பினர்கள், ஊர் மக்கள் தவிர காவல்துறைக்கும் கணிசமான பங்கு இருக்கிறது.

சாதி இப்படி ஆணவத்தைப் படுகொலையாக நீட்டிக்கும்போது மரண தண்டனையில் உடன்பாடில்லாத நாமும் நீதிக்காக, சாதிவெறியின் அத்துமீறலை நசுக்குவதற்காக வலிகளின் பக்கம் நிற்பது தவிர்க்க முடியாததாகிறது. அதுமட்டுமல்லாமல், எளிய மக்களின் சனநாயகம் தன் பயணத்தை நம்பிக்கையுடன் நகர்த்துவதற்கு தூக்குத்தண்டனை போன்ற புனிதமான நீதிகள் தேவை என்பதை சாதியின் கொடூரங்களும் கொலைகளும் நமக்கு உணர்த்துகிறது. அதேவேளையில், மேல்முறையீடு உள்ளிட்ட வார்த்தைகள் நீதியின் நம்பிக்கையைச் சிதைப்பதாக அச்சுறுத்தினாலும் சாதிவெறியர்கள் இதுபோன்ற உச்சபட்ச தண்டனையில் இருந்து விடுபடாமல் இருக்க சனநாயகத்தின்மீது பற்றுள்ள ஒவ்வொருவரும் போராட்டக்களத்தில் பங்கேற்கவேண்டும். இன்றைய தீர்ப்பைக் கொண்டாடுவதற்காக மட்டுமல்ல, நாளைய படுகொலையைத் தடுப்பதற்கும்!

நமது தமிழ்மண் / டிசம்பர் 2017

ஆணவப் படுகொலை: நீதியின் நிழலில் நிகழும் மரணங்கள்!

ஆணவப் படுகொலை: நீதியின் நிழலில் நிகழும் மரணங்கள்! பூவிழியன் சனவரி 10,2017, ஆணவக்கொலை வழக்கில் முதன் முறையாக மரண தண்டனை விதிக்கப்...